திங்கள், 17 மார்ச், 2025

காமாக்‌ஷி திருவிருக்குக் குறள்


காம வக்‌ஷியி னாமஞ் செப்பவே
ஏம வைகலுஞ் சேம நல்குமே
கச்சி மாநக ரிச்சை கண்ணியின்
கச்சைக் காணவே யிச்சை வேகுமே
அஞ்சு பாணமு மஞ்ச லத்தமுந்
தஞ்ச மென்றிர வஞ்ச மில்லையே
ஞால மாளுவாள் கோல மாழவே
தூல மேனியும் வால மாகுமே
செய்ய மேனியண் மைய விழிகளை
உய்ய வழியெனச் செய்ய விழைமினே
தாயு மானவள் தூய பாதமே
வேய வினைகளை மாய வைக்குமே
மூவர் போற்றிடுந் தாவிஃ றேவியின்
கோவில் காணவே யாவி மாறுமே
(தா இல் தேவி - குற்றமற்றள்)
மாதுளைக் கொடி தாது போன்றவள்
பாதுகை தொழ வீதி வருமினே
ஐவருய்யவே மெய்வருத்திய
தெய்வ யிளைதர வுய்வு மரியதே ?
கந்தனம்மையை வந்தனைசெய
முந்துவினையற நந்து வீடுமே
அழிவி லாதவோ ரழகு குமரியைத்
தொழுது போற்றிடு மழகன் மொழிகளே
 
 
சீர் பிரித்து / பொருள்
 
1காமாக்‌ஷியின் நாமம் செப்பவே
ஏம வைகலும் ஷேமம் நல்குமே
 
ஏம - இன்பம் வைகலும் - நாள் தோறும்  
 
2 கச்சி மாநகர் இச்சைக் கண்ணியின் 
கச்சைக் காணவே இச்சை வேகுமே
 
இச்சைக் கண்ணி - காமாக்ஷி
 
 3 அஞ்சு பாணமும் அஞ்சல் ஹச்தமும் 
தஞ்சம் என்று இர வஞ்சம் இல்லையே
 
அஞ்சு பாணம் = ஐந்து அம்புகள்  
 
4 ஞாலம் ஆளுவாள் கோலம் ஆழவே
ஸ்தூல மேனியும் வாலம் ஆகுமே
 
வாலம் - இளமை 
 
5 செய்ய மேனியள் மைய விழிகளை
உய்ய வழி எனச் செய்ய விழைமினே
 
செய்ய- சிவந்த  மைய- கருமையான
6 தாயும் ஆனவள் தூய பாதமே
வேய வினைகளை மாய வைக்குமே
 
வேய -அழுந்தி இருக்கும்
 
7 மூவர் போற்றிடும் தா இல் தேவியின்
கோவில் காணவே ஆவி மாறுமே
 
மூவர் - திரிமூர்த்திகள் தா - குற்றம் ,இல் - இல்லாத  
8 மாதுளைக் கொடி தாது போன்றவள்
பாதுகை தொழ வீதி வருமினே
 
 தாது -தேன்
9 ஐவர் உய்யவே மெய் வருத்திய
தெய்வ இளை தர உய்வும் அரியதே?
 
ஐவர்- பாண்டவர் , இளை - இளைய சகோதரி - திருமாலின் இளைய சகோதரி அம்பாள்  
10 கந்தன் அம்மையை வந்தனை செய்ய
முந்து வினை அற நந்தும் வீடுமே
 
நந்தும்- கிட்டும்  
 
11 அழிவு இல்லாத ஓர் அழகு குமரியைத்
தொழுது போற்றிடும் அழகன் மொழிகளே
 
அழிவில்லாத அழகு குமரி- காமாட்சி (பாலா ஸ்வரூபம்)
 
 
 
 
 
இத்திருவிருக்குக் குறள் யாப்பு திருஞான சம்பந்தரின் திருவீழிமிழலைப் பதிகத்தை அடியொற்றி அமைந்தது  
 
திருஞானசம்பந்தர் வரலாறு ... 
 
May be an image of 1 person, temple and text 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி