யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்
மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே
செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்
சொந்தமென் றான துணிவுளதே வந்தகன
வாட்கில்லை யாவதிங் கொன்று
யாப்பு அறியாது ஏங்க இயமானன் ஆட்கொண்டான் - யாப்பிலக்கணம் அறியாமல் யாம் ஏங்கி நிற்கும் பொழுது எம்மை ஆட்கொண்டனன் எமது தலைவன்
மூப்பு அறியாது ஆக முடிவு எடுத்தால் - மூப்பு என்பதை அறியாது இளமையாக நிற்க நாம் முடிவெடுத்தோமாயின்
காப்பு அவனே - அவனே நமக்குக் காப்பாக நிற்பானாம்
செந்தமிழ் பாட்டில் திளைக்கும் திரு மருகன் - செந்தமிழ் பாட்டைக் கேட்க இன்புறும் திருமகளின் மருகனான முருகன்
சொந்தம் என்று ஆன துணிவு உளதே - நம்மைச் சொந்தமாக அவன் ஆண்டுகொண்ட துணிவு உள்ளதே ஆதலால்
அந்தகன ஆளுக்கு இங்கு ஆவது ஒன்று இல்லை - நமனின் ஆட்களுக்கு முருகன் அடியாரிடம் செய்வதற்கு எந்த வேலையும் இல்லை
நாம் யாப்பிலக்கணத்தை அறியாது நின்றபோது எம்மை ஆட்கொண்டருளினான் நம் தலைவனான முருகப்பெருமான் ,மூப்பு அறியாது நாம் நிற்க அவாக் கொண்டாலும் அதற்கும் காப்பாக நின்று அதற்கு அருள் புரிபவனும் அவனே தான், செந்தமிழ்ப் பாட்டில் மிக்க களிப்புறும் திருமகள் மருகனான அவன் நமக்குச் சொந்தாமான துணிவு நம்மிடம் உள்ளதால், அந்தகனின் ஆளுக்கு நம்மிடம் செய்ய இங்கு எந்த வேலையும் இல்லை என்பதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக