தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று
மன்னன் வருவான் மணவாளன்
மாலை மார்பன் வடிவேலன்
தென்னன் றிருவாஞ் செந்தமிழின்
சிதையாச் சீராஞ் சிறுபாலன்
நன்னெறி ஞானர் நசையாகு
நான்கு நவிலு நதிபாலன்
என்னை யிணைய வென்றெண்ணி
யிமையா திழந்தே னிளமையையே
மன்னன் - எனது தலைவனும்
மணவாளன் - நெஞ்சத்தளவில் எனது மணாளனான
மாலை மார்பன் வடிவேலன் - மாலையை மார்பில் அணிந்தவனும் வேலேந்திய அழகனுமான
தென்னன் திரு ஆம் செந்தமிழின் - பாண்டிய மன்னனின் செல்வமாகிய செந்தமிழ் மொழியின்
சிதையா சீர் ஆம் சிறு பாலன் - சிதையாத செல்வமாய் விளங்கும் சிறுவனுமான
நல் நெறி ஞானர் நசை ஆகும் - நல்ல நெறி பேணும் அறிவாளர்களின் விருப்ப இலக்கானவனும்
நான்கும் நவிலும் நதி பாலன் - நான்கு வேதங்களும் போற்றும் கங்கை நதியின் மைந்தன்
என்னை இணைய வருவான் என்று எண்ணி - என்னுடன் இணைய வருவான் என்று எண்ணி
இமையாது இழந்தேன் இளமையை - இமையாமல் காத்திருந்து எனது இளமையை இழந்து விட்டேனே
இதே பாடலை ஈற்றடையை மட்டும் மாற்றி தலைவியின் கூற்றாக உயிர்கள் இறைவனை நோக்கி பாடுமாறு செய்ய -
மன்னன் வருவான் மணவாளன்
மாலை மார்பன் வடிவேலன்
தென்னன் றிருவாஞ் செந்தமிழின்
சிதையாச் சீராஞ் சிறுபாலன்
நன்னெறி ஞானர் நசையாகு
நான்கு நவிலு நதிபாலன்
தன்னைத் தரவே சடுதியிலே
தாழ்ந்தாற் சாவா டலைவியென்றே
தன்னைத் தரவே சடுதியில் இறைவனான முருகன் வருவான், அவனுக்குத் தெரியும் தான் தாமதித்தோமென்றால் தனது தலைவியான உயிர்கள் உயிர் வாழா என்று என்னும் பொருள் பட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக