செங்கதிரோன் றேரோட்டி மலைபெயரி னாதர்
செந்தமிழாற் சேயோன்றன் புகழ்பாடு நாதர்
மங்கைவிரி வலைகடக்க வழிசொல்லு நாதர் வாட்டமிகு வாழ்வினிக்க மந்திரஞ்சொன் னாதர்
சிங்கமுகன் சுற்றமழித் துய்வளித்த நாதர்
சிந்தைமகிழ்ந் துபதேசஞ் செப்புதனி மாந்தர்
தங்குதடை சற்றுமிலா தாசுகவி பொழியுஞ்
சந்தமிகு சீருரைக்க விவர்க்குநிக ரிவரே
செங்கதிரோன் தேரொட்டி - அருணன்
மலை பெயரின் நாதர்- அருண கிரி என்ற பெயர் கொண்ட அருணகிரி நாதர்
செந்தமிழால் சேயோன் தன் புகழ் பாடும் நாதர் - செந்திமழ் பாக்களால் சேயோனாகிய முருகனின் திருப்புகழ் பாடு நாதர்
மங்கை விரி வலை கடக்க வழி சொல்லு நாதர் - மங்கையர்கள் விரிக்கும் வலைகளில் செல்லும் எண்ணத்தை விடுத்து இறை வழிக்குச் செல்ல வழி உரைக்கும் தலைவர்
வாட்டம் மிகு வாழ்வு இனிக்க மந்திரம் சொல் நாதர்- பல வாட்டங்கள் உண்டாகும் இவ்வாழ்வை இனிய வழியில் நடத்திச் செல்ல மந்திரம் சொல்லும் நாதர்
சிங்கமுகன் சுற்றம் அழித்து உய்வு அளித்த நாதர்- சிங்கமுகனும் சூரனும் அவர்களின் சுற்றத்தையும் அழித்து வானோர்க்கும் மண்ணோர்க்கும் உய்வு தந்த நாதரான முருகப் பெருமான்
சிந்தை மகிழ்ந்து உபதேசம் செப்பு தனி மாந்தர்- தனது சிந்தை மகிழ்ந்து பிரணவ உபதேசத்தை தானே வந்து அளித்த ஒரே மனிதர்
தங்கு தடை சற்றும் இ(ல்)லாது ஆசு கவி பொழியும் - தங்கு தடை சிறிதளவும் இல்லாது ஆசு கவியைப் பொழியும்
சந்தம் மிகு சீர் உரைக்க இவர்க்கு நிகர் இவரே - சந்தக் கவிகாள் பெருமையை உரைக்க வல்ல குணத்தில் இவர்க்கு பிறர் யாவரும் நிகர் இல்லை, இவரே இவருக்கு நிகர் என்பதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக