சனி, 8 ஆகஸ்ட், 2026

மன்றாடி போற்று மகவாகி எண்சீர் விருத்தம்

மன்றாடி போற்று மகவாகி யன்னை 

        வரைமக டந்தவேல் வாங்கி யவுணர் 

குன்றாடப் போர்செய்து வானவர் மீளக் 

     குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து 

சென்றாடிக் கானக் குறத்தி காதல் 

     சிறக்கக் களவா டறுமுகத் தாளுங்

குன்றாடி யென்றாடி வெளுக்குமுன் வாராய் 

    குடிகொள்ள வென்னெஞக் கற்கோவிற் கண்ணே 

மன்றாடி போற்று மகவு ஆகி - தில்லையில் நடனமாடும் சிவபெருமானே போற்றும் அவர்தம் மகனாகி 

அன்னை வரைமகள் தந்த வேல்வாங்கி - அன்னையான மலைமகள் பார்வதி தேவி தந்த வேல் வாங்கி 

அவுணர் குன்று ஆட போர் செய்து - அரக்கர்கள் குன்றான கிரவுஞ்ச மலை நொறுங்கும் படிப் போர் தொடுத்து 

வானவர் மீள குலம் காத்து - தேவர்கள் மீண்டு தம் ஆட்சியைப் பெற அவர்கள் குலத்தைக் காத்து 

குஞ்சர தேவி மணந்து - தேவானை தேவியை கற்பு மணம் புரிந்து 

சென்றாடி கான குறத்தி காதல் சிறக்க - குதூகலமாகச் சென்று கானத்தின் கண் வாழும் குறமகளான வள்ளி தேவியினது காதல் சிறக்குமாறு 

களவாடு அறுமுகத்து ஆளும் குன்றாடி - களவு மணம் புரிந்த ஆறு முகங்களால் குன்றுதோறும் ஆளும் முருகப் பெருமானே 

என் தாடி வெளுக்கும் முன் குடிகொள்ள வாராய் - எனது தாடி வெளுத்து நான் மூப்பெய்தும் முன் குடி கொள்ள வருவாயாக 

என் நெஞ்ச கல் கோவிலின் கண்ணே - எனது கல் போன்று நெஞ்சாய் இருப்பினும் அத்தைக் கோவிலாகக் கருதி 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்றாடி போற்று மகவாகி எண்சீர் விருத்தம்

மன்றாடி போற்று மகவாகி யன்னை          வரைமக டந்தவேல் வாங்கி யவுணர்  குன்றாடப் போர்செய்து வானவர் மீளக்       குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து ...