காலாற் புவிவா னளந்தான் கதிதரு
மாலா லுயர்வார் மதிபெற்ற- நாலா
யிரம்பாடு நல்லாழ்வா ரேத்துதமிழ்ச் சொல்லே
வரம்பானால் வாழ்வாந் தலை
காலால் புவி வான் அளந்தான் - தனது கால்களால் வாமனாவதாரத்தில் புவியையும் வானையும் அளந்தவனான
கதி தரு மாலால் - வீடு பேறு என்னும் கதியை அளிக்க வல்ல திருமாலால்
உயர்வு ஆர் மதி பெற்ற - உயர்வும் அழகும் பொருந்திய மதியைப் பெற்ற
நாலாயிரம் பாடு - நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அருளிச் செய்த
நல் ஆழ்வார் ஏத்து தமிழ் சொல்லே - நன்மை பொருந்திய ஆழ்வார்கள் திருமாலை ஏத்திப் பாடிய தமிழ் வேதமே
வரம்பானால் வாழ்வு தலை ஆம் - நமது எல்லையாகக் கொண்டு நாம் பின்பற்றி வந்தால் வாழ்வானது சிறந்து விளங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக