வியாழன், 12 மார்ச், 2026

வாழ்வை நேரிசை பஃறொடை வெண்பா

 வாழ்வைத் தொலைத்து வளரப் பொருளீட்ட

றாழ்வைத் தரவிருக்கச் சார்வேனோ வூழ்வினையா

னிற்கும் பொருளதுவே நிற்குமெனுஞ் சான்றோர்சொல்

கற்கும்  வழக்குக் கரந்ததுவோ பொற்குவியல்

வீணா மொருநா ளதனான் மெலிந்துவரும்

வாணாண் முடியுமுனே மைவளருங் காணாக 

கண்டத்தர் காறொழலே நன்று



வாழ்வை தொலைத்து வளர பொருள் ஈட்டல் - பொருள் ஈட்டல் என்னும் ஒரே குறிக்கோளில் நின்று தனது வாழ்வைத் தொலைத்தல் 


தாழ்வை தர இருக்க சார்வு ஏனோ - தாழ்வை அளியா நிற்க அதன் சார்வு ஏனோ?


ஊழ்வினையால் நிற்கும் பொருள் அதுவே நிற்கும் எனும் சான்றோர் சொல் - ஊழின் படி கிடைக்கும் பொருளே கிடைக்கும் அதன் மேல் நிற்காது ஒருவரிடம் என்னும் ஆன்றோர் வாக்கை 


கற்கும் வழக்கு கரந்ததுவோ - கற்கும் வழக்கம் மறைந்து போனதோ?


பொன் குவியல் வீண் ஆம் ஒரு நாள் அதனால் - பொன்னால் குவிக்கப்பட்ட செல்வமும் வீண் ஆகும் ஏதோ ஒரு நாளில் 


அதனால் - ஆதலின்


மெலிந்து வரும் வாழ் நாள் முடியும் முன்னே -  குறைந்து வரும் வாழ் நாள் முடிவதற்கு முன்னம் 


காண் நாக மைவளரும் கண்டத்தர் - நாகம் தெரியும் படியான கறுத்த நிறம் அடர்ந்த மிடற்றை உடைய சிவபெருமானின்

கால் தொழலே நன்று - திருவடிகளை வணங்குவதே சாலச் சிறந்தது 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

காலாட்படையாகும் கட்டளைக் கலித்துறை

 காலாட் படையாகும் கட்டக் களியின் உயிரனைய  மாலாட் படுத்தும் மனது மயங்கிப் பலகணக்கில் தாலாட்டுப் போன்றெளி தன்றே சமனிலை காத்திருத்தல்  வேலட்டு ...