காதன் மலர்ந்தது கனிந்தன காண்பவை
காழ்ப்பெனுங் கருத்திலை நெஞ்சினிலே
மோதன் மறந்தது மூள்பகை மறைந்தது
முகிழ்நகை வளர்ந்தது வாழ்வினிலே
ஈதல் வளர்ந்துபின் இகழ்புகழ் ஒன்றின
இறையொளி நிலைத்தது மனவானில்
சாதல் ஒழிந்தது தான்றன தழிந்தது
தனிப்பெருங் கருணையின் வடிவமைவே
காதல் மலர்ந்தது - அன்பு என்னும் கருத்து மலர்ந்தது அதன் பின்னர்
காண்பவை கனிந்தன- காண்பவை யாவும் மென்மையாய்த் தோன்றின
நெஞ்சினிலே காழ்ப்பு என்னும் கருத்து இல்லை - நெஞ்சத்தில் வெறுப்போ கசப்போ அறவே இல்லை
மோதல் மறந்தது - மோதல் என்னும் பண்பு மறந்தே போயிற்று
மூள் பகை மறைந்தது - மூளும் உட்பகையும் புறப்பகையும் மறைந்து போயின
வாழ்வினிலே முகிழ் நகை வளர்ந்தது - வாழ்வில் புன்சிரிப்பு மலர்ந்து பின்பு வளர்ந்தது
ஈதல் வளர்ந்து - ஈகை என்னும் குணம் வளர்ந்தது
பின் இகழ் புகழ் ஒன்றின- அதன் பின்னர் இகழும் புகழும் ஒருமனதாகக் காணப் பெற்றன
மன வானில் இறை ஒளி நிலைத்தது - மனம் ஆகிய வானத்தில் இறையின் ஒளி நிலைத்து நின்றது
சாதல் ஒழிந்தது - இறப்பு என்னும் கருத்து ஒழிந்தது
தான் தனது அழிந்தது - தான், தனது (அகங்காரம்/மமகாரம்) என்ற கருத்து அழிந்தது
தனி பெரும் கருணையின் வடிவு அமைவே - தனிப் பெருங் கருணை குணம் கொண்ட இறையின் வடிவமைவு இதுவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக