பாப்புனை வறியேன் யாப்பெது மறியேன்
பைந்தமிழ் நுண்மையா னறியேன்
நாப்பொலி வில்லை நயமெது மில்லை
நல்லிசை யறிவுமெனக் கில்லை
தீப்பொலி கின்ற நுதல்விழி வேந்தின்
செந்தமிழ்ச் செல்வன்சீ ரருளான்
மூப்பொழிக் கின்ற முத்தமிழ் ஞான
முகிழ்வியப் பிங்குக்கா ணுகவே
பா புனைவு அறியேன் யாப்பு எதும் அறியேன் - பாவைப் புனையவோ யாப்போ யானறியேன்
பைந்தமிழ் நுண்மை யான் அறியேன் - பைந்தமிழில் பொதிந்து கிடக்கும் நுண்மையையும் நான் அறியேன்
நா பொலிவு இல்லை - நாவில் பொலிவெனக்கில்லை
நயம் எதும் இல்லை - எந்த நயமும் எனக்கு இல்லை
நல் இசை அறிவும் எனக்கு இல்லை - நல்ல இசையின் அறிவும் எனக்கு இல்லை
தீ பொலிகின்ற நுதல் விழி வேந்தின் - நெற்றிக் கண்ணில் தீ பொலிகின்ற தலைவனான சிவ பெருமானின்
செந்தமிழ் செல்வன் சீரருளால் - மைந்தனான செந்தமிழ்க் கடவுளான முருகனின் சீர் அருளால்
மூப்பு ஒழிக்கின்ற முத்தமிழ் ஞானம் - சாவையும் ஒழிக்க வல்ல முத்தமிழின் ஞானமானது
முகிழ் வியப்பு இங்கு காணுகவே - தானாக உதிக்கிறதான வியக்கத் தக்க நிகழ்வை இங்குக் காண்க!
முருகன் அருள் இருந்தால் அறிவிலியும் புலவனாகலாம் என்பது கருத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக