மனநிறை வனிதையின் மதுவதோ
மதிநிறை மகிழ்தரும் வடிவதோ
தனநிறை தையலின் றழைவதோ
தனிப்பெருஞ் சார்விலி தமிழதோ
நினைவொழி நெடுநிலை நெகிழ்வதோ
நிகரிலி நிலவொளி நீர்மையோ
வினையொழி வேலவன் மிகையருண்
மிகைமொழி விளம்பினும் விந்தையே
மனம் நிறை வனிதையின் மது அதோ- மனத்தில் நிறைந்த அழகுப் பெண் தரும் போதையோ அது
மதி நிறை மகிழ்தரும் வடிவு அதோ - மதிக்கு நிறைவான மழிவு தரும் அழகோ அது
தனம் நிறை தையலின் தழைவு அதோ - தனம் நிறை தையலான திருமகளின் தழைவு என்னும் குணமோ அது
தனி பெரும் சார்வு இலி தமிழ் அதோ- தனிப்பெரும் மொழியான பிற மொழிகளின் சார்வு இல்லாமல் இயங்கும் தமிழ் போன்றதோ
நினைவு ஒழி நெடு நிலை நெகிழ்வு அதோ - நினைவை ஒழித்து நெடுந்தவம் செய்யும் நிலையின் நெகிழ்வோ அது
நிகர் இலி நிலவு ஒளி நீர்மையோ - தன்னிகர் இல்லாத நிலவின் ஓளி தரும் நீர்மையோ
வினை ஒழி வேலன் மிகை அருள் - வினையை ஒழிக்கவல்ல வேலை ஏந்தும் முருகப் பெருமானின் மிகையான அருள்
மிகைமொழி விளம்பினும் விந்தையே - எவ்வாறாக மிகைமொழி உரைத்து உவமையாகக் கூறினாலும் அதையும் தாண்டிய விந்தை அன்றோ அது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக