சனி, 31 மே, 2025

மாயனே வெண்பா

மாயனே யென்மனத்தி னாயக னென்றெண்ண
மாயனே நன்கு வழிகாட்டி - மாயனே
யாவுமாய் நின்றா னெனவுணரப் பேறுற்றாற்
பாவமோ பாருடைத்த பற்று

 

செவ்வாய், 27 மே, 2025

வேண்டுதல் கலித்துறை

வேண்டுதல் வேண்டேன் விழைவரிய வேண்டாமை வேண்டேன்
றோண்டுதல் வேண்டேன் றுயரகல மீண்டெழல் வேண்டேன்
றூண்டுதல் வேண்டேன் சுருதிதம தாளுமை வேண்டேன்
றாண்டுதல் வேண்டேன் றனிமுருக னாமமென் மாண்பே

 

ஞானிக்கும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

ஞானிக்கு மோனிக்கு நாதற்கு மாந்தர்க்கும்
வானிற்குந் தேவர்க்கும் வாழ்வளிக்குந்- தேனிற்கு
நாவுடைத்த தேவிக்கு நாத மொழியுளதே
பாவெடுத்துப் போற்ற வுனை 


செவ்வாய், 20 மே, 2025

அன்னையாய் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

அன்னையா யத்தனா யாறமைக்கு மாசானா
யென்னையா டேவ விளமுருக - வுன்னையே
யாவுமா யெண்ணுமிவ் வாழ்விலே நேருமோ
நோவுமா நோன்பன்றோ விஃது 


உமையொரு விருத்தம்

உமையொரு முகமுஞ் சிவன்றனி முகமு மமர்ந்திருக்க 

                வுலகினை யாவு முழன்றிடச் செய்த வசுரரின
 

லெமையொரு முகமாய்ப் பனிமதி சடைய காத்தருள்க 

              வெனமுறை தேவர் முழுமன தோடு சென்றிறைஞ்ச


வுமையொரு முகனாய்ச் சிவனைம் முகனா யுருவெடுத்த 

             வொளிதிகழ் பாலன் செருவளர் நாதன் வென்றகதை


யெமையொரு முகமா யிறைவனி னினைவா யிருத்திருக்க 

             விரிகதிர் ஞானம் வினைவழி வாழ்வி லொளிர்ந்திடுமே 

 

திங்கள், 19 மே, 2025

இளந்தளிர் இன்ப எழில் வெண்பா

இளங்காதல் சோடி யிணையிலா வின்ப
மளந்தாலு மிங்கறிவார் யாஅர் - விளங்கா
துளந்தெளிந் துண்மை யுணர்வுடையார்க் கல்லா
லிளந்தளி ரின்ப வெழில்

பொற்பதந் தோன்றூம் பொலிந்து வெண்பா

மும்மலங்கள் வீணாக முக்கண்ணன் கண்டிறக்கச்
செம்மையுரு நெஞ்சிற் றிகழ்ந்தொளிர- நம்முளே
சொற்பத மாய்ந்துபோ யந்தமிலா வம்பலத்தான்
பொற்பதந் தோன்றும் பொலிந்து

 

வெள்ளி, 16 மே, 2025

தந்தை சௌபாயீ

தந்தை சொல்லே கதியென் றிருந்தா
னங்கை சொல்லைத் தீவிற் பணிந்தா
னெந்தச் சொல்லைக் கையெடுப் பானோ
வந்தச் சொல்லே மெய்யெனுந் தேனோ

 

எழுதாமறை கலிப்பா

 

எழுதாமறையின் சிறப்பறியா ரெழுதாமரையின் சிறப்பறியார்
மழுவார்மரையார் சிறப்பறியார் முதுமானுடர்தஞ் சிறப்பறியார்
தொழுவார்முறையின் சிறப்பறியார் கழுவேற்றியவர் சிறப்பறியார்
பழுதாயழியும் பிறப்பறியார் பணிவாயமர்ந்தார் சிறந்தா ரவரே

 

புதன், 14 மே, 2025

அத்திரத்தின் கலி விருத்தம்

அத்திரத்தி னாற்றலற்றுப் பாரதத்துப் போரினி
லத்திரத்தின் மனமுழன்ற வர்ச்சுனர்க்குப் பாகனா
யத்திரத்தை யேவநின்ற வர்க்கன்மைந்தன் மாய்த்தவு
னத்திறத்தை விரித்துரைக்க வெத்திறத்தி லேலுமே 


ஊழியூழி கலி விருத்தம்

ஊழியூழி யாழியேந்து காத்துவந்த மூர்த்தியே
நாழிவந்து நகங்கிழித்த சங்கரிக்கு மூர்த்தியே
வாழிவாழி யென்றுபோற்ற ஞானமீயு மூர்த்தியே
யேழைவாழ வுன்னையன்றி யேதுமில்லை பூர்த்தியே

 

செவ்வாய், 13 மே, 2025

முருகா வெண்பா

முருகா குமரா வுமைபாலா மாயோன்
மருகா வெளிவிடையார் மைந்தா - பருகா
துனபுகழ் வீணா யுழலுஞ் சிறியேன்
மனமகிழ்ந் தாண்டனைநந் தி 

 

உலகம் சிந்து (செவ்வாயிற் செவ்வேள்)

உலக முவக்கு முமைமைந்த - வுள்ளக் கலக மகற்று மருட்கந்த 

நிலவுங் கதிருஞ் சுடர்நெருப்பு - முன் னிகரில் விழிமூன் றெனவொளிருந் 

திலகப் பெயரிற் றிகழமரில் -வெற்றித் திலகந் தருவா யருணிகரில் 

கலியின் வலியைத் தகர்த்தெறியு - மெங் கருணைக் கடலின் றுதிமிளுரும்

 

தொந்திநாதன் கலி விருத்தம்

 தொந்திநாத னெளிமையுங் கங்கைநாதன் ஞானமு
முந்திதோற்று விதியின்றாதை யொப்பிலாத வடிவமு
மந்தரித்தன் கருணையு மருக்கன்போல  வெளிச்சமுஞ்
செந்தினாதன் சேர்த்தணிந்த விந்தைமேவு கோலமோ

 

ஞாயிறு, 11 மே, 2025

பதினொன்றே கலி விருத்தம்

பதினொன்றே பாடிப் பரமனைப் பாடாக் கதிநன்றே யுய்யக் கனியமுது மாறன் றுதியொன்றே செய்த மதுரகவி சொல்லைக் கதியென்றே கொள்வார் பதமடைவர் தானே

 வெண்டளைகளாலமைந்த #கலிவிருத்தம்

துண்பிளந்த கலி விருத்தம்

 

தூண்பிளந்த சீயமாக பாலனுற்ற துயரினை
யூண்மகிழ்ந்து பொன்னன்சிந்து முதிரமுறிஞ்சு பெற்றியோய்
நாண்மலர்ந்த வலர்கடூவி நாளுமுன்னை யேத்தவே
யூன்பிளந்த வுகிரவாழி யுண்மைபத்தர்க் காக்குமே
சீர்பிரித்து
தூண் பிளந்த சீயம் ஆக பாலன் உற்ற துயரினை
ஊண் மகிழ்ந்து பொன்னன் சிந்தும் உதிரம் உறிஞ்சு பெற்றியோய்
நாள் மலர்ந்த அலர்கள் தூவி நாளும் உன்னை ஏத்தவே
ஊன் பிளந்த உகிர ஆழி உண்மை பத்தர்க் காக்குமே
பொருள்:-
பாலனான பிரகலாதன் உற்ற துயரினை இரணியனை உண்ணும் உணவாகக் கொண்டு அவன் இரத்தத்தை உறிஞ்சும் செயலால் தீர்த்த பெருமைக் குரிய தூண் பிளந்து வந்த சீயமே நரசிம்ம! உன்னை நாள் மலர்களால் தூவி பூசிக்க, இரணியன் ஊனைப் பிளந்த உனது நகம் என்னும் திருவாழி உண்மை பத்தர்களை என்றும் காக்கும்!
பொன்னன்- இரணியன்
To destroy the grief of Prahlada you incarnated as Narasimha, breaking the pillar and consuming a
Hiranya Kashipu’s blood. Praying to you everyday with freshly blossomed flowers your nails / Sudarshana Chakra that tore open the flesh of Hiranyakadhipu would always protect true devotees!
 
No photo description available. 

கருணை ஏகபாதம்

 கருணைக் குருவகங் காமாட்சி கண்களே

 கருணைக் குருவகங் காமாட்சி கண்களே

 கருணைக் குருவகங் காமாட்சி கண்களே

 கருணைக் குருவகங் காமாட்சி கண்களே

 

வெள்ளி, 9 மே, 2025

முதலென்று கலிப்பா

முதலென்று முடிவென்று முனைவென்று விடிவென்று
முகிழ்கின்ற வாழ்வென்று முடிகின்ற வீழ்வென்று
நிகழ்கின்ற நிசமென்று நினைவென்றெ திர்வென்று
புகழ்கின்ற பரனென்றி கழ்கின்ற நரனென்று
விழைவென்று விதியென்று விதிதோன்று கதியென்று
மகிழ்கின்ற வறனென்று மனநோகு பிழையென்று
திகழ்கின்ற திருமார்பன் றிருவாழிக் கரனென்றே
யகழ்கின்ற யடியார்கட் கருஞான மளிப்பானைத்
தொழுகின்ற மனநாடித் துதிப்பாட லிசைப்போமே 


இருமொழி வெண்பா

இருமொழி தோற்று மிறைவ னுடுக்கை
தருமொழி தாண்டவக் கூத்தோ - பருவதன்
செல்வியொடு சேர்ந்த திருக்கோலங் கண்டார்க்கு
வல்வினை யண்டுமோ வந்து
 

செவ்வாய், 6 மே, 2025

செவ்வரளி வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

செவ்வரளிப் பூத்தொடுத்துச் செவ்வேட்குச் சாற்றிமகி
ழெவ்வேளை யேலுமோ யானறியே -னிவ்வேளைப்
பாத்தொடுத்துப் பூவன்ன பாவித் தணுகுவதே
யாத்தறிந்த வேற்ற வழி

 

போயிற்று ஆசிரியப்பா

போயிற் றென்ன கங்குலை விலக்கு
ஞாயி றன்ன ஞானச் சுடரோய்
கடிதின் மகிழுங் கரிமுக னென்ன
வுடனே யருளு வடிவேன் மன்ன
வடிவி னிகரி றிருவளர் மார்பன்
வாஞ்சை கொண்ட வள்ளி கேள்வ
பருமுலைத் துடியிடை பார்வதி யன்பா
லொருங்கே யணைத்த சண்முகச் சிறுவ
வாலா கால மருந்திக் காத்த
வால்கெழு கடவுண் மைந்த
போலுரை பொய்க்கும் புதுமை யோனே

 

திங்கள், 5 மே, 2025

தீரா வெண்பா

தீராக் குறைதீர்க்குஞ் செவ்வே ளிருக்கவிங்
கோரா தவன்புகழை யுற்றபயன் - நேரேது
மில்லாப் பரிதிநமக் கீந்த கொடைவிளங்கா
நில்லா நிழற்றுதிக்கு நேர்

 

அங்கமேவு கலி விருத்தம்

 
அங்கமேவு  பணியணிந்த கங்கைநாதன் பங்கின
ளங்கைதங்கு சங்குசாடு செங்கணாதன் பங்கின
டுங்கவேத னாற்றலான தூயஞான மங்கையுஞ்
சிங்கவேறு நங்கையென்ற சித்தமேவ முத்தியே

காலமென்ற கலிவிருத்தம்

காலமென்ற கூறுதிக்க மூலமான தத்துவ
ஞாலமன்று நன்குதிக்க ஞானமான தத்துவஞ்
சீலநன்று சேர்ந்திருக்கத் திருவுடைத்த தத்துவங்
கோலமொன்று கூறுமூன்று காளிவாணி திருவலோ

 

ஐந்தாறு விருத்தம்

 

ஐந்திலே யொன்றை யடக்கு மைந்தலை யழகுப் பெற்றான்
ஐந்திலே யொன்றை நுதற்கண் அம்சமாய் வெளியே விட்டான்
ஐந்திலே யொன்று சுமக்க ஐந்திலே ஒன்றில் விட்டான்
ஐந்திலே யொன்றைக் காக்க ஐந்திலே ஒன்றிற் பிறந்தான்
ஆறிலே உதித்து வந்தான் ஆறழ கான னத்தான்
ஆறிலே படையாய்க் கொண்டான் ஆறென ஆங்கு நின்றான்
ஆறிலே உணரப் பட்டான் ஆறுத லாங்க ளித்தான்
ஆறிலே உறைய நின்றான் ஈறிலா வழகன் நன்றே
 

கண்சுமந்த விருத்தம்

 

கண்சுமந்த காட்சியாவுங் கண்களுக்குப் பாரமிஃ
றிரைசுமந்த காட்சிபோல தொடர்புடைத்த தில்லையே
பெண்சுமந்த வுயிர்கள்யாவும் புவிதனக்குப் பாரமில்
பிழைபொறுக்கும் பொறையுடைத்த புனிதமேன்மை கொண்டதால்
விண்சுமந்த வுலகம்யாவும் வெளிதனக்குப் பாரமில்
வெளியுமுள்ளும் விரவிநின்ற விதியுடைத்த தென்பதா
லெண்சுமந்த மனதுமட்டும் பாரமாவ தென்கொலோ
மண்சுமந்த வீசருக்கு மனம்படைத்து யர்மினே

திருவுடைத்த கலிப்பா

 

திருவுடைத்த நாரணற்குத் திருவுடைத்த செல்வனீ
யிருளகற்று மிரவிபோல வினிதுதித்த புவியின்கண்
கருவுடைத்த வுயிர்களுய்யக் கதியமைக்கும் விடிவுநீ
பெருவுடைத்த யதிதமக்குப் பிறங்குசோதி ராசனே
 

பெய்யுவானம் கலிவிருத்தம்

 

பெய்யுவானங் குடையெடுத்து மோடுமூடு விரலுடைத்
தைவருக்குச் சபையடைந்து நாடுநாடு தூதநீ
மெய்விளம்பு பத்தருக்குச் சூடுசூடு பாகனா
பொய்விளங்கு கஞ்சனேவு சாடுசாடு பாதனே

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி